வத்திராயிருப்பு: கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சித்திரை அமாவாசையான நேற்று பக்தர்களின்றி சதுரகிரி சுந்தமகாலிங்கம் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் தலா 3 நாட்கள், பிரதோஷத்தன்று 1 நாள் என பக்தர்கள் வழிபட கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த மாதம் தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பரவியதையடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதன்படி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கடந்த பங்குனி மாத அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. கடந்த 20ம் தேதி பிரதோஷத்தன்றும், சித்திரை அமாவாசையான நேற்றும் பக்தர்கள் வருகையின்றி தாணிப்பாறை வனத்துறை கேட் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஒன்று, இரண்டு பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் கொளுத்தி சாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றனர்.