சென்னை: தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிக்காத ஊரகப்பகுதிகளில் ஏரிகளை தூர்வாருதல், கட்டுமான பணிகள் சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 662 பேர் குணமடந்துள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வருகிற மே 3ஆம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார்.
அதேசமயம், ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் சில பகுதிகளில் ஊரங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனினும், தமிழகத்தில் தளர்வுகள் இல்லை எனவும் ஊரடங்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 3 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்கள்ளுடன் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.