சித்தூர்: கொரோனா வைரசை ஒழிக்க வேண்டி சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று ‘கணபதி ஹோமம்’ நடைபெற்றது. சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து சென்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியால் கடந்த மாதம் 19ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசை ஒழிக்க வேண்டி நேற்று கோயில் வளாகத்தில் வேத பண்டிதர்கள் மூலம் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் தேமுல்லு, அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.