டெல்லி: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 21,393 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 681 பேர் உயிரிழந்த நிலையில், 4257 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அடுத்த மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறுவதை தடுப்பதற்காக, மக்களிடம் அதிகளவில் பரிசோதனை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை தற்போதுள்ள நடைமுறைகளில் நடத்தப்படும் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைப்பதற்கு 3 நாட்கள் வரை ஆகின்றன. எனவே, பரிசோதனையை விரைவாக நடத்துவதற்காக சீனாவிடம் இருந்து ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ எனப்படும் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த வாரம் முதலில் 6,5 லட்சம் கருவிகளும், அதைத் தொடர்ந்து 3 லட்சம் கருவிகளும் 2 கட்டங்களாக வாங்கப்பட்டன. இந்நிலையில், இந்த கருவிகளை பயன்படுத்தி பல்வேறு மாநிலங்கள் சோதனை நடத்தி வருகின்றன. ஆனால், இந்த கருவியால் நடத்தப்படும் பரிசோதனைகளில் 95 சதவீதம் தவறான முடிவுகளை காட்டுவதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி உள்ளன. இதையடுத்து, இந்த கருவிகளை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என தடை விதித்து அனைத்து நிலங்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டது.
இந்நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக்கு தடை விதித்தது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் எழுதிய கடிதத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதை கண்டறியவே ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம்; கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் என்று தெரிவித்துள்ளது.