திருவனந்தபுரம்: கொரோனா பீதி முடிவடைந்த பின்னர் லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் கேரளாவில் மட்டும் குறைந்தது 5.50 லட்சம் பேர் திரும்பி வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரையும் கேரளாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கேரள அரசு முக்கிய திட்டங்களையும் தயாரித்துள்ளது. இதன்படி வசிக்கும் நாட்டில் கொரோனா பரிசோதனை முடித்து நோய் இல்லை என சான்றிதழ் கிடைத்த பின்னரே அவர்கள் கேரளா வர முடியும். இதற்காக சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்ய வேண்டும்.
கேரளாவில் விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படும்போது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். நோய் அறிகுறி இல்லாதவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் அங்கு 14 நாட்கள் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் தங்களது சொந்த செலவில் ஓட்டல்கள் மற்றும் ரிசாட்டுகளில் தனிமையில் இருந்து கொள்ளலாம். சுற்றுலா விசாவில் சென்று காலாவதி முடிந்து சிக்கி இருப்பவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், கொரோனா பாதிப்பு இல்லாத மற்ற நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.