டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார் என்று கருத்துக்கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 184,204 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,637,414 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 717,625 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,674 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா வைரஸால் அனைத்து நாடுகளும் செய்வதறியாமல் ஸ்தம்பித்து உள்ளனர்.
இதற்கிடையே, உலக தலைவர்களின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் ஏப்ரல் 14 நிலவரப்படி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 65 சதவீத ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பை குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வாழத்து தெரிவித்துள்ளார். அதில், “கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் உலக நாடுகளை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துகிறார். நாட்டு மக்களுக்கு ஒருபுறம் பாதுகாப்பு அளித்து கொண்டே மறுபுறம் உலக நாடுகளுக்கு தேவையான பாதுகாப்புகளை செய்து வருகிறார். இதனால் உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்“ என்று பதிவிட்டுள்ளார்.