சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள் வரும்போது டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்ய எந்த வழிகாட்டுதலையும் மத்திய, மாநில அரசுகள் செய்யவில்லை. எனவே, வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றிவரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்றார்.
மனுதாரர் தரப்பு வக்கீல், தமிழக நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வெளிமாநில வாகன ஓட்டுநர்களுக்கு இந்த சோதனை செய்யப்படுவதில்லை. மத்திய அரசு இதுகுறித்த வழிகாட்டுதல்களை தெரிவிக்கவில்லை என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மே 7ம் தேதிக்குள் பதில் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.