நெல்லை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களுக்கு தினமும் காலையில் நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆடாதோடா குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது முதல் கபசுரக் குடிநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள டாம்ப்கால் மருந்து விற்பனை மையத்தில் கபசுரக் குடிநீர் பாக்கெட் வருவது அரிதாக உள்ளது.
இங்கு ஆயிரம் பாக்கெட் கபசுரக் குடிநீர் பொடி வந்தாலும் ஒரு சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்து விடுகிறது. இந்நிலையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தினமும் காலையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆடாதோடை குடிநீர் வழங்குவது போல் கபசுரக் குடிநீரையும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சித்த மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.