சென்னை: அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் மற்றும் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த 55 வயது டாக்டருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மரணமடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் மயானத்திற்கு மருத்துவ ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும், போலீசாரும் ஆம்புலன்சில் எடுத்து சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர் உடலை அடக்கம் செய்ய விடாமல் ஒரு கும்பல் தடுத்ததுடன் ஊழியர்களையும், ஆம்புலன்ஸ் டிரைவரையும் தாக்கியுள்ளது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாக்டரின் உடலை வேறு ஒரு கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்துள்ளனர். மக்களின் உயிரை காக்க போராடி உயிர்விட்ட டாக்டரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தது மனிதநேயமற்ற செயல். இதை தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.