×

தென்காசி அருகே சாலையில் நடந்து சென்ற போது 2 பெண்கள் உள்பட 3 பேர் கார் மோதி பலி: ஊரடங்கு அமலில் உள்ள போது நிகழ்ந்த பரிதாபம்

சுரண்டை: வீ.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற 3 பேர், அசுர வேகத்தில் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் அருகேயுள்ள கழுநீர்குளத்தை சேர்ந்தவர்கள் மாடசாமி (59), மருதாலயபாண்டியனின் மனைவி துரைச்சி (55), முத்துபாண்டியின் மனைவி பொன்னம்மாள் (60). இவர்கள் மூவரும் அருகேயுள்ள பகுதியில் உள்ள தோட்டத்தில் புல் அறுப்பதற்காக நேற்று காலை 7 மணி அளவில் அத்தியூத்து - சுரண்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். வடக்கு கழுநீர்குளத்தை  கடந்து சென்ற போது இவர்களுக்கு பின்னால் அசுரவேகத்தில் வந்த கார், கண்ணிமைக்கும் வேளையில் மோதியது. இந்த விபத்தில் 10 அடி தொலைவில் உள்ள வயல்வெளியில் தூக்கி வீசப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தில் பலியான மூவரின் உடல்களையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்தவர் ஆய்க்குடி அடுத்த அகரக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜோன்ஸ் அந்தோணி (32) என்பதும், முக்கூடலில் தனது உறவினர் வீட்டில் தந்தையை விட்டுவிட்டு வீடு திரும்பியபோது விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது.   ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேர்ந்துள்ள இந்த விபத்தில் ஒரே நேரத்தில் 3 பேர் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.



Tags : women ,road ,Tenkasi Three ,Tenkasi , Tenkasi, 2 girls, kills, curfew
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...