சென்னை: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை வீட்டை விட்டு காலி செய்ய வீட்டு உரிமையாளர்கள் நிர்பந்தம் செய்வதாக தமிழக அரசுக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், வாடகை வீட்டில் தங்கியுள்ள சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அரசுஉத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.