சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 2 லட்சம் கருணை தொகை, மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அரசாணை: அத்தியாவசியமான துறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். மேலும் அவர்களுக்கு கருணைத்தொகையாக 2 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிவதால், யாரேனும் இந்நோய் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், கருணைத்தொகையாக 2 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் கூறுகையில், “ கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை இருந்து வந்தது. தற்போது அரசு அறிவித்த இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஒரு மாதம் ஊக்கத் தொகை வழங்கியுள்ளது. அதே போல கொரோனாவை தடுக்கும் வகையில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஒரு மாதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும்” என்றார்.