ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமாநில வாலிபர் மர்மமாக இறந்தார். இதையறிந்த மக்கள், கொரோனா தொற்று பரவியதோ என பீதியடைந்துள்ளனர். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கீரப்பால் (20). ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டையில், நண்பர்கள் சிலருடன் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக கீரப்பாலுக்கு காய்ச்சல், வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.இந்நிலையில் நேற்று முந்தினம் திடீரென அவருக்கு வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அவரை, வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி கீரப்பால் நேற்று இறந்தார். இதனால் அப்பகுதியில் கொரோனா பீதி ஏற்பட்டது. தகவலறிந்து சுகாதார துறையினர், அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 3 நாட்களாக கீரப்பால் நாட்டு கோழி குழம்பு சாப்பிட்டுள்ளார். இதில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிந்தது.