×

கொரோனாவில் இருந்து குணமடைந்த இத்தாலி சுற்றுலாப்பயணி: ஐரோப்பாவைவிட கேரளாவில் பாதுகாப்பாக உணர்ந்தேன் என நெகிழ்ச்சி பேட்டி

திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுக்கு ஆளாகி கேரளாவில் சிகிச்சையில் இருந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி முழுமையாக குணமடைந்தார். அவரை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மருத்துவமனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ராபர்ட்டோ டொனேசோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். வந்த இடத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவிடம் நன்றி தெரிவித்துப் பேசினார் டொனேசோ. அப்போது அவர், “ஐரோப்பாவைவிட கேரளாவில் பாதுகாப்பாக உணர்ந்தேன்” என்று சொல்ல அமைச்சர் ஷைலஜா நெகிழ்ந்து போனார். மருத்துவமனையில் இருந்து ராபர்ட்டோ டொனேசோ கிளம்பும்போது, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனும், டொனேசோவுக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினரும் அவரை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டொனேசோ, “கேரளம் எனது இரண்டாவது வீட்டைப் போல இதயத்தில் இடம் பிடித்துவிட்டது. இந்தக் கடவுளின் தேசத்துக்கு மீண்டும் நான் வருவேன். எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும், சேவை செய்து கவனித்த செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் அடிமனத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு எனக்குக் கிடைத்த சிகிச்சையின் தரமும், உணவுகளும், மருத்துவப் பராமரிப்பும், கேரளம் குறித்த உயர்வான மதிப்பீட்டை என்னுள் உருவாக்கியுள்ளது” என்று சொன்னார்.

Tags : Italy ,Corona ,Europe ,Kerala ,Italy Tourist , Corona, Italy, Tourist, Europe, Kerala
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்