கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் தீவிரம் கட்டுப்படாமல் இருக்கவே, மே 3 வரை இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. முதல் முறை ஊரடங்கை அமல்படுத்தியபோது சரியான திட்டமிடுதல் இல்லாததால் அமைப்புசாரா மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களும், ஏழை, எளிய மக்களும் கடும் இன்னலுக்கு உள்ளாயினர். இரண்டாம் முறை ஊரடங்கை நீட்டித்தபோதும் தகுந்த நிவாரண உதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் நாட்டில் உள்ள 60 கோடிக்கும் மேலான தினக்கூலிகளின் நிலை மிகப்பரிதாபகரமாக மாறியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே சரியான வழியாக இருக்காது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சொந்த ஊருக்கு கால்நடையாக கூட்டம்கூட்டமாக வெளியேறுவது, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சமூக இடைவெளி இல்லாமல் சந்தைகளில் கூடுவது என ஊரடங்கின் நோக்கமே சிதைந்து வருகிறது. நீண்ட கால ஊரடங்கின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தவும் முடியாமல், பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் வகையில் ஊரடங்கு மாறிப்போயிருக்கிறது. இதில் இருந்து மீள்வதற்கான நடைமுறை சாத்தியங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து நான்கு கோண அலசல் இங்கே.