ஊட்டி: ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் கூந்தல் சிக்கி இளம்பெண் தலை துண்டித்து உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கேரட் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட கேரட்களை மூட்டைகளாக கட்டி, கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இயந்திரங்களில் முழுமையாக கழுவிய பின், சுத்தம் செய்யப்பட்ட கேரட் மூட்டைகளாக கட்டப்பட்டு, லாரிகளில் ஏற்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று ஊட்டி அருகே கேத்தி பாலடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் எதுமைக்கண்டி பகுதியை சேர்ந்த சுமித்ராவும், அவரது மகள் நந்தினியும் (18) பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எதிர்பாராதவிதமாக நந்தினியின் தலைமுடி, கழுத்தில் போட்டிருந்த துப்பட்டா ஆகியவை இயந்திரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது.
இதை பார்த்த மற்ற தொழிலாளர்கள் இயந்திரத்தை நிறுத்துவதற்குள் நந்தினியின் தலை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. தாய் சுமித்ரா கண் முன் நந்தினி கோரமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.