சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அரசை பொறுத்தவரை, கொரோனா குறித்து மறைத்து வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. வெளிப்படைத் தன்மையோடு முதல்வரும் சரி, சுகாதார துறை அமைச்சரும் சரி, இந்த கொரோனா குறித்த அறிவிப்புகளை தினந்தோறும் நாட்டு மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு மாநிலத்திற்கும் மற்ற மாநிலத்துக்கிடையேயான ஏதேனும் பிரச்னை இருக்கும்பொழுதுதான் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய கூட்டம் தான் நடத்த வேண்டும். டிசம்பர் இறுதி வாரத்தில் சீனாவில் இந்த வைரஸை கண்டறிந்தபோது, ஜனவரி மாதத்திலேயே பல்வேறு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டார். உண்மையிலேயே என்ன செய்ய தவறினார்கள் அதை சொல்ல வேண்டும்.கொரோனா வைரஸ் தொற்று நம் மாநிலத்தில் தற்போது இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளது. சமூக பரவல் என்பது இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசு காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் எடுத்ததன் விளைவாக தமிழகத்தில் சமுதாய பரவல் இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.