கார்கஸ்: கொரோனாவை தடுக்க ஆல்கஹால் அடங்கிய கிருமி நாசினியை கொண்டு கைகழுவ வேண்டும் என்பது வலியுறுத்தப்படும் சூழலில், வெனிசுலாவில் இத்தகைய கிருமி நாசினிகள் கிடைப்பது அரிதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,54,295-ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றால் 22,51,768 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 5,74,383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மலேரியாவிற்கு எதிரான இந்த மருந்து கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது. இந்நிலையில் வெனிசுலாவின் முன்னணி மது ஏற்றுமதி நிறுவனமான ரம் சான்டா தெரெசா மது தயாரிப்பை 60 சதவீதம் வரை குறைத்து, அதற்கு பதிலாக கிருமி நாசினியை தயாரித்து வருகிறது. இங்கு 24 மணி நேரமும் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 3,000 பாட்டில்கள் கிருமிநாசினியை தயாரிக்கின்றனர். இவற்றை மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது ரம் சான்டா தெரெசா நிறுவனம்.