×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த 2,715 சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. ஆனால், போதிய டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லாததால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் காலியாகவுள்ள 2715 சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-2 (மருத்துவ பணியாளர்கள்) பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அனைத்து மண்டல துணை இயக்குனர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்தும் வகையில் பொது சுகாதாரத்துறை சார்பில் 2715 சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்கள் (ஆண்கள்) தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி இந்த பணியிடங்கள் காலியாக உள்ள செங்கல்பட்டு  73, காஞ்சிபுரம் 48, திருவள்ளூர் 80, திருப்பத்தூர் 61, வேலூர் 62, கடலூர் 74, சேலம் 98, மதுரை 79, ஈரோடு 83, கோவை 93, திருப்பூர் 73, விழுப்புரம் 69, கிருஷ்ணகிரி 50, நெல்லை 63, தூத்துக்குடி 53, கோவில்பட்டி 29, அரியலூர் 39, பெரம்பலூர் 23, கரூர் 43, தஞ்சாவூர் 59, திருச்சி 53 என மொத்தம் 2715 பேர் 3 மாதம் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுகின்றனர்.

இதற்கு, பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல், உயிரியல் பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தமிழ் வழியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பணியாளர் (ஆண்கள்)/ சுகாதார ஆய்வாளர் பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்து இருக்க வேணடும். இந்த பணியாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக தரலாம். அவுட்சோர்சிங் முறையில் உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : health inspectors , Corona, Health Department, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு...