சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, நர்சாக பணியாற்றுவதற்கு நடிகை ஜூலி விண்ணப்பித்துள்ளார்.சின்னத்திரையில் நடித்து வந்த ஜூலி, பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். நடிக்க வருவதற்கு முன் இவர் நர்சாக பணியாற்றினார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சில நடிகைகள் தன்னார்வலர்களாக மாறி தொண்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோல் ஜூலியும் நர்ஸ் பணிக்கு திரும்புவாரா என்று, சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.இதுகுறித்து ஜூலி கூறும்போது, ‘நர்ஸ் பணி என்பது வெறும் வேலை கிடையாது. அது ஒரு சேவை. அதுவும் இந்த நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என் மனதுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் தரும். எனவே, நர்ஸ் பணி செய்வதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளேன். தற்போது அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.