சென்னை: கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கிட் கருவிகளை டாடா நிறுவனம் தமிழக அரசுக்கு அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கொரோனா வைரஸ் நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன.
மேலும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவையான கருவிகளையும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது டாடா நிறுவனம், கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதற்காக, சுமார் 8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கிட் கருவிகளை தமிழக அரசுக்கு அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.