கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கினால் வேலை பார்க்கும் இடங்களில் சிக்கிய வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிந்த பின்னர் ஊருக்கு போகலாம் என்று ஆவலுடன் காத்திருந்த அவர்களின் நம்பிக்கையில், மே 3ம் தேதி வரையிலான ஊரடங்கு நீட்டிப்பு மண் அள்ளி போட்டுள்ளது. இதனால், வேலை செய்யும் மாநிலங்களில் வேலை, பணத்தை இழந்து சாப்பாட்டுக்கு வழியின்றி அவர்கள் படும் அல்லல் நீடிக்கிறது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த வெளிமாநில தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ``கரும்பை அறுவடை செய்யாததால் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் வருமானத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,’’ என்று புலம்பினார்.