×

காலை 11.30 மணிக்கு மேல் மக்கள் வெளியில் வர வேண்டாம் தமிழகத்தில் 3 நாளுக்கு வெயில் சுட்டெரிக்கும்: ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும். பொதுமக்கள் 11.30 மணிக்கு மேல் வெளியில் வர வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. தற்போது எல்நினோ காரணமாக கடல் பரப்பில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படுகிறது. அதிகபட்சமாக மதுரையில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. சேலம் 102, திருச்சி, திருத்தணி, தஞ்சாவூர், தர்மபுரி, கரூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. ஆனால், மேலும் வெயில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெயில் மேலும் அதிகரித்து சுட்டெரிக்கும். அதனால் பொதுமக்கள் யாரும் காலை 11.30 மணிக்கு மேல் மாலை 3 மணி வரை வெளியில் வருவதோ, அல்லது வெயிலில் நின்று வேலை செய்வதோ கூடாது. இது தவிர பிற மாவட்டங்களை பொறுத்தவரையில் கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.


Tags : sunshine,Research Center
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...