×

ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்துக்கு தினம்₹500 வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் குடும்பங்களுக்கு தினமும் தலா 500 வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மீன்பிடி தடை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு அரசு தரும் நிவாரண நிதி தினமும் 83 மட்டுமே. ஏற்கனவே கடந்த மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போது, ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளிலும், மோட்டார் படகுகளிலும் மீன்பிடிக்கச் செல்லும் சிறிய மீனவர்களின் குடும்பங்கள் ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைகாலத்தில் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, மீன்பிடி தடை காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் 500 வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து கடந்த 9ம் ேததி மனு கொடுத்தோம். அதன் மீது அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனவே, எங்கள் மனுவை பரிசீலித்து மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 500 தினமும் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : fisherman ,hearing ,High Court ,Fisherman's Family , Curfew, a ban on fishing, HC, Corona
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...