திருச்சி: திருச்சியில் ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில், மாற்றான் மனைவி வீட்டுக்கு சென்று கும்மாளமிட்ட எஸ்எஸ்ஐ, தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் கணவனை அடித்து உதைத்துள்ளார். திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த இரும்பு லோடுமேன் ஒருவர் பாலக்கரை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், எனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் துபாயில் வேலை செய்து வந்தபோது எனது மனைவி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கிருந்து திருச்சி வந்தேன்.
இதுகுறித்து கேட்டபோது எனக்கும், எனது மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் விசாரித்து சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் நான், எனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறேன். தற்போது லோடுமேனாக வேலை செய்து வருகிறேன். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வேலைக்கு செல்வதற்காக எனது வீட்டில் இருந்து எனது மனைவி இருக்கும் வீடு வழியே சென்றேன். அப்போது எனது மனைவி வீட்டிற்குள் யாரோ ஒருவர் செல்வதை பார்த்து கதவை தட்டி கேட்டேன். அப்போது மனைவியும், அவரும் என்னை தாக்கினர். அந்த நபர் காவல்துறையில் பணியில் இருப்பவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘புகார் அளித்தவரின் மனைவிக்கும், மாநகர காவல்துறையில் எஸ்எஸ்ஐயாக உள்ள ஒருவருக்குமிடையே கடந்த 7 ஆண்டாக பழக்கம் இருந்துள்ளது. அன்று நள்ளிரவு அந்த பெண்ணை பார்க்க சென்றபோது, அவரது கணவர் பார்த்ததால் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.