சென்னை: சென்னையில் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோரே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக நேற்று மட்டும் 31 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 211 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் குணமடைந்து உள்ளனர்.
அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேரும், திருவிக நகரில் 30 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும், அண்ணாநகரில் 22 பேரும், தடையார்ப்பேட்டையில் 19 பேரும், தேனாம்பேட்டையில் 16 பேரும் உள்ளனர். மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி சென்னையில் நேற்று 205 பேருக்கு கொரானாபாதித்ததை வைத்து சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதித்தோரில் ஆண்கள் 68.78 சதவீதம் பேர் என்றும், பெண்கள் 31.22 சதவீதம் பேர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் 30 முதல் 39 வயது வரையிலான 44 பேரும், 50 முதல் 59 வயது வரையிலான 39 பேரும், 60 முதல் 69 வயது வரையிலான 21 பேரும், 70 முதல் 79 வயது வரையிலான 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது - பாதித்தோர் எண்ணிக்கை
0-9 = 1
10-19 = 14
20-29 = 32
30-39 = 44
40-49 = 39
50-59 = 39
60-69 = 21
70-79 = 13
80 + = 1