சென்னை: சென்னை கே.கே.நகர் 62வது செக்டாரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (20). தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது பைக் திருடுபோனது. இதுகுறித்து ராமச்சந்திரன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, இவரது நண்பன் அபிஷேக் என்பவர், திருடுபோன பைக்கை வாலிபர் ஒருவர் ஓட்டி வந்ததாகவும், அவரை பிடித்து வைத்திருப்பதாகவும் ராமச்சந்திரனிடம் செல்போனில் கூறியுள்ளார். இதையடுத்து, ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, போரூரை சேர்ந்த தமிழ்செல்வன் (19) என்பது தெரிந்தது. அப்போது அவர், ‘‘காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவரிடம் இருந்து இந்த பைக்கை வாங்கினேன்,’’ என கூறியுள்ளார். உடனே ராமச்சந்திரன் தனது நண்பர்களான தீனா (19), சந்தோஷ்குமார் (20), அபிஷேக் (21) ஆகியோரை அழைத்து சென்று காட்டுப்பாக்கத்தில் உள்ள ஆகாஷை சந்தித்து பைக் திருடியது குறித்து கேட்டுள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து ஆகாஷை தனது வீட்டிற்கு கடத்தி வந்து, ஒரு அறையில் பூட்டி வைத்து, நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதில் ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். பின்னர், அந்த அறையிலேயே வைத்து அவரை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், ேநற்று முன்தினம் இரவு உணவு கொடுப்பதற்காக அறையை திறந்தபோது, ஆகாஷ் மூச்சு பேச்சின்றி கிடந்தார். தகவலறிந்து அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதுபற்றி அறிந்த கே.ேக.நகர் போலீசார் அங்கு வந்து, ஆகாஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார், மாணவன் ராமச்சந்திரன் அவரது நண்பர்களான தீனா, சந்தோஷ்குமார், அபிஷேக் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.