திருமலை: ஆந்திர மாநிலத்தில் இதுவரை 10 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 473 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் 9 பேர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது மருத்துவமனையில் 450 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபுரத்தை சேர்ந்த தாசில்தாருக்கும், அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கல்யாணதுர்கத்தை சேர்ந்தவருக்கு சிகிச்சை அளித்தபோது பெண் மருத்துவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தாசில்தாருக்கு சமூக பரவல் காரணமாக வைரஸ் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.