சென்னை,: நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை வெளியிட்ட வீடியோவில், ‘வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். கொரோனா வைரஸால் உலகமே பாதிப்பு அடைந்துள்ளது. இதில் இந்தியாவோ, தமிழ்நாடோ விதிவிலக்கல்ல. உங்களை பிரிந்து வாடும் உறவினர்கள், குடும்பத்தினருக்கு எல்லா நேரமும் உங்களை பற்றிதான் சிந்தனை. உங்களை பற்றிதான் கவலை. எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்த நாட்டின் அரசு என்னென்ன கட்டுப்பாடு விதித்துள்ளதோ அதை தவறாமல் கடைப்பிடித்து, உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்.
இதுதான் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நீங்கள் கொடுக்கும் இந்த ஆண்டின் மிகப் பெரிய பரிசு. நலமுடன் வாழுங்கள். கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்து போகும்’’ என்று தெரிவித்துள்ளார். டிவிட்டர் பதிவில், ‘‘இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில், உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.