சென்னை,: அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், ‘’இந்திய திருநாடு யாரையும் மதத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ, தொழிலாலோ பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவுதான் அரசியல் சட்டமாகி, தனிமனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது. அண்ணல் அம்பேத்காருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச்செய்வதே’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கமல்ஹாசன் வெளியிட்டிருந்த வீடியோவில், தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, எப்படி முடிந்தது என்று உலகே வியக்கும் கட்டிடக் கலைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். அவ்வையின் சொற்படி, ஊக்கமது கைவிடாமல் இருந்தால், வரும் நாட்கள் நமதாகும். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு புதியதோர் ஆரம்பமாகவும், ஆரோக்கியமான ஆண்டாகவும் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.