×

மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது தடியடி: துரதிர்ஷ்டவசமானது என உத்தவ் தாக்கரே விளக்கம்

மும்பை: மும்பையில் சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில், வெளி மாநிலத் தொழிலாளர்கள் பலர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முறைசாரா தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,  தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி  மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சமூக விலகலை கடைபிடிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்திராவில் மக்கள் கூடியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் விசாரித்தார்.

உத்தவ் தாக்கரே விளக்கம்

இன்று பாந்த்ராவில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. ஏப்ரல் 14 முதல் ரயில்கள் தொடங்கும், அதனால் அவர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல முடியும் என்று அவர்கள் நினைத்ததால் இது நடந்திருக்கலாம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நான் ஏற்கனவே கூறியது போல மகாராஷ்டிரா நாட்டிற்கு வழி காண்பிக்கும். கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் 10 உள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தையும் கொரோனா இல்லாத மாவட்டமாக்க முயற்சி செய்து வருகிறோம்.

கொரோனா பாதிப்பு முடிந்தவுடன் மகாராஷ்டிரா மாநிலம் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டும். அதை சமாளிக்க பல்வேறு குழுக்களை அமைத்துள்ளோம். வெளி மாநிலதொழிலாளர்கள் யாரையும் விருப்பமின்றி அடைத்து வைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பது எங்களின் கடமை.

Tags : Mumbai ,Strike ,Uddhav Thackeray , Mumbai, workers, bearded, unlucky, Uthav Thackeray
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...