பண்ருட்டி: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் மெயின்ரோட்டில் ஊராட்சி மன்றம், புதுப்பேட்டை காவல்துறை, ஓவியர் சங்கம், இளைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளனர். ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் இலவச முககவசம் ஆகியவை ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டன. நையாண்டி மேளத்துடன் எமதர்மன் வேடமணிந்து பாச கயிறை கொண்டு அவ்வழியே தேவையின்றி சுற்றியவரின் கழுத்தில் போட்டு இழுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு போலீசார் முக கவசம் அணிவித்து, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினர்.
ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வசிகாமணி, துணைத் தலைவர் மணிகண்டன், துணை பிடிஓ ராஜா, ஊராட்சி செயலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு விழிப்புணர்வு பாடல்கள் மூலம் பொதுமக்களிடையே கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு தனித்திரு, விழித்திரு என விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டிஎஸ்பி நாகராஜன், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினர். பின்னர் அவ்வழியே சென்ற லாரி, பைக், கார் ஆகியவற்றில் பயணம் செய்த பொதுமக்களிடம் பிரசார நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.