சேலம்: சேலம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள ஜருகுமலைக்கும் ஜல்லூத்துமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சூரியூர் என்ற கிராமம் இருந்தது. இங்கு 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என கூறிய வனத்துறை அதிகாரிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் அங்கிருந்தவர்களை அதிரடியாக அப்புறப்படுத்தினர். இந்நிலையில் சூரியூரைச்சேர்ந்த முருகேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்தார். அதில், சூரியூரில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக இருக்கிறது. எங்களை மீண்டும் அதே இடத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மூலமாக, அப்பகுதிக்கான மாஜிஸ்திரேட்டை அனுப்பி விசாரித்து வருகிற 17ம்தேதிக்குள் புகைப்படத்துடன் இமெயிலில்அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து சேலம் 1வது நீதித்துறை நடுவர் செந்தில்குமாரை விசாரித்து அறிக்கை அனுப்ப சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை நீதித்துறை நடுவர் செந்தில்குமார், சூரியூருக்கு சென்றார். அவருடன் மாவட்ட வன அதிகாரி பெரியசாமி, ரேஞ்சர்கள் சுப்பிரமணியம், சரவணன், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர். காலை 8 மணியில் இருந்து 12 மணி வரை நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். சுமார் 297 ஏக்கர் பரப்பளவு முழுவதும் கரடுமுரமான பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கிணறுகள், தென்னைமரங்கள் உள்ளிட்ட இடங்களை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது.