×

ஊரடங்கால் பறிக்க ஆட்கள் இல்லை மரத்திலேயே அழுகும் அல்போன்சா

* ஏற்றுமதிக்கும் வாய்ப்பில்லை
* மா விவசாயிகள் மனக்குமுறல்

சிவகங்கை: தொடரும் ஊரடங்கால்  காளையார்கோவில் அருகே பறிக்க ஆட்கள் இல்லாமலும் ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லாததாலும் அல்போன்சா மாம்பழங்கள் மரத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதூர், சிங்கம்புணரி, காரைக்குடி, காளையார்கோவில், திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. காளையார்கோவில் அருகே கருங்குளத்தில் சுமார் 300 ஏக்கரில் உயர்தர அல்போன்சா மாமரம் நடவு செய்து வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் நடவு செய்ததில் இருந்து 5 ஆண்டுகளுக்குப்பின் காய்க்க தொடங்கிவிடும். 15 ஆண்டுகளுக்கு முன் நடவு செய்யப்பட்ட இம்மரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக விளைச்சல் கொடுத்து வருகின்றன.

 உயர் ரக வகையான அல்போன்சா பழங்களுக்கு கடும் கிராக்கி உண்டு. இங்கு விளையும் பழங்கும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நேரத்தில் கொரோனா ஊரடங்கால் காய் மற்றும் பழங்களை மரத்தில் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பறித்த பழங்களையும் வாகனங்கள் மூலம் ஏற்றிக்கொண்டு செல்ல முடியவில்லை. இரண்டு வாரங்களாக பறிக்க வேண்டிய பழங்கள் மரத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விவசாயி முருகேசன் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை மாம்பழங்களை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வேன்.

12 கிலோ பாக்ஸ் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை என 300 டன் ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஆண்டு மரத்திலேயே பழம் அழுகி பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீர் வளம் இல்லாத இப்பகுதியில் கிடைக்கும் மழை நீரை கால்வாய்கள் மூலம் சேமித்து சொட்டுநீர் பாசனம் மூலம் மா விவசாயம் செய்து வருகிறேன். காப்பீடும் செய்யமுடியாத நிலையில் அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Alphonsa , Alphonsa ,tree ,tree
× RELATED தர்மபுரியில் செந்தூரா மாம்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ₹80க்கு விற்பனை