காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை தலைமை செயலகத்துக்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்காக சிறப்பு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பொன்னையா, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வேளையில், தலைமை செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ள, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தலைமை செயலகம் சென்று வருவதற்கு, மாவட்ட எல்லைவரை சிறப்புப் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன்படி காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் இருந்து 2 பஸ்கள் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக போரூர் சென்றடையும். மேலும் 2 பஸ்கள் புதிய ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜாபாத், படப்பை வழியாக தாம்பரம் சென்றடையும்.
அதேபோன்று மாலை 7.30 மணிக்கு போரூரில் இருந்தும், தாம்பரத்தில் இருந்தும் தலா 2 பஸ்கள் காஞ்சிபுரத்துக்கு இயக்கப்படும். இந்த பஸ்களில் தலைமைச் செயலக அலுவலக பணியாளர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். பஸ் இயக்குவதற்கு முன்பு முறையாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பஸ்சில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.