டெல்லி : மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி 4வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள்களை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார்.
1.வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை
2. சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
3.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை எடுக்கவும்
4.கொரோனவை கண்டறியும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை செல்போனில் மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
5.ஏழை எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உதவ வேண்டும்.
6.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை மரியாதையுடன் நடத்தவும்.
7.மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.