மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், ஒரு மாணவர் தனது நண்பரின் குடியிருப்பில் பதுங்க முயன்றபோது பிடிபட்டார். கொரோனா வைரஸ் பயத்தை கருத்தில் கொண்டு குடியிருப்புக்குள் எந்தவொரு நபருக்கும் அனுமதி மறுத்தது மங்களூரை சேர்ந்த ஒரு அபார்ட்மென்ட் அசோசியேஷன். இதனால் வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பது இல்லை. இதனால் அங்கு தங்கி இருந்த மாணவர் ஒருவர் தன்னுடன் தனது நண்பரை தங்க வைக்க ஒரு பெரிய சூட்கேசில அடைத்து வைத்து இழுத்து வந்தார்.
இதை பார்த்து குடியிருப்பு நிர்வாகிகளுக்கு சந்தேகம் வந்தது. மேலும் அந்த சூட்கேஸ் ஆடிக்கொண்டே இருந்தது. இதனால் குடியிருப்பு நிர்வாகிகள் சூட்கேசை திறந்து காட்டும்படி மாணவரிடம் கூறினர். இதனால் பதட்டமடைந்த மாணவன் மெதுவாக சூட்கேசை திறந்தபோது அதில் இருந்து வாலிபர் வெளியே வந்தார். இதை தொடர்ந்து போலீசாருக்கு குடியிருப்பு நிர்வாகிகள் தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கெடுபிடி காரணமாக தனது நண்பரை குடியிருப்பில் தங்கவைப்பதற்காகவே சூட்கேசில் அடைத்து அழைத்து வந்ததாக மாணவர் தெரிவித்தார்.