கோவை: கோவையில் காதலிப்பதாக கூறி 9ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 4 மாணவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். வயிற்று வலி காரணமாக இவர் நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது பற்றி மருத்துவமனை நிர்வாகத்தினர் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொரோனா நோய் அச்சத்தில் இருந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மாலையில் தப்பி சென்று விட்டார்.
போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். நேற்று அந்த மாணவியின் வசிப்பிடம் தெரியவந்தது. போலீசார் மாணவியிடம் விசாரித்தபோது, ‘‘தன்னை காதலிப்பதாக கூறி பழகியவர்கள் மிரட்டி பலாத்காரம் செய்து விட்டனர். இதனால் கர்ப்பமாகி விட்டேன். அச்சம் காரணமாக பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டேன். அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதைத்தொடர்ந்து என் தாயுடன் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தபோதுதான் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்’’ எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கார்த்திக் (23), தனசேகர் (24), சிங்காநல்லூரை சேர்ந்த சந்தோஷ் (19) மற்றும் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 4 பேர் என 7 பேரை கைது செய்தனர். மாணவர்கள் 4 பேரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர்.
மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவர் ஒருவர் இந்த மாணவியை யாரும் இல்லாதபோது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கார்த்திக், தனசேகர் ஆகியோரும் வீட்டிற்கு மிரட்டி அழைத்து சென்று பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.