புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவ்டேகர், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை செயலாளர் அந்தஸ்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் நேற்று பணிக்கு திரும்பினர். கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மத்திய அரசு கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இன்றுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் இணை செயலர்கள், அவர்களுக்கும் மேலான அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை நேற்று முதல் பணிக்கு வரும்படியும், மூன்றில் ஒரு பங்கு அலுவலர்களுடன் மத்திய அமைச்சக அலுவலகங்கள் செயல்படலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதை பின்பற்றி நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இளைஞர் நலத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், மற்றும் பல்வேறு மூத்த அதிகாரிகள் நேற்று அலுவலகங்களுக்கு வருகை தந்தனர். குறிப்பாக இணை செயலாளர் அந்தஸ்து, அதற்கு மேற்பட்ட அந்தஸ்து உள்ள அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் நேற்று அலுவலகங்களுக்கு வந்து பணியில் ஈடுபட்டனர்.