×

தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை, சூழ்நிலைக்கு ஏற்ப உரிய வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்: தமிழக அரசு விளக்கம்

* தன்னார்வலர்கள் யாருக்கும் தடை விதிக்கவில்லை
* மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தல்

சென்னை: சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில், பொது மக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது. ஆனால் தற்போது, இந்த பேரிடர், கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது, யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாத நிலையில், நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இயல்பான நகர்வுகளுக்கும், தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும், நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், அதே சமயம் நோய்த் தொற்று பரவுவதை தவிர்க்கவும், முறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் விளக்கினார். அதனால் தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும், அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ, மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமோ, மண்டல அலுவலர்களிடமோ, நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ, பேரூராட்சியாக இருந்தால், செயல் அலுவலரிடமோ, ஊராட்சி ஒன்றியமாக இருந்தால், வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  

 

மேலும், இத்தகைய உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விநியோகப்பதற்கென அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு, அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். இப்பணியில் தன்னார்வலர்களும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம் என தெரிவித்தார்.

 

மாநில அளவில் கொரோனா நிவாரணத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில், ஒரு குழு தன்னார்வலர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, இப்பணிகள் சீரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதியோர், மாற்றுத் திறனாளிகள், நம் மாநில மற்றும் இதர மாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கிட, 2,500க்கு மேற்பட்ட நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்து கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர் என கூறினார்.
மேலும் stopcorona.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்துக் கொண்டு நிவாரணங்களை வழங்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் உதவி செய்வதை தடுக்கவில்லை என்றும், உதவி செய்யும் வழிமுறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என கூறினார். தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு தடை விதித்ததது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விளக்கம் அளித்தார். தன்னார்வலர்கள் உதவும் போது தொற்று அதிகமாகும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக முதல்வர் கூறினார்.

 

தன்னார்வலர்கள் அரசிடம் ஒப்படைத்தால் வருவாய்த்துறை மூலம் விநியோகம் செய்யப்படும் என கூறினார். stopcorona.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்துக் கொண்டு நிவாரணங்களை வழங்கலாம் என தெரிவித்தார். மேலும் உதவி செய்வதை தடுக்கவில்லை என்றும், உதவி செய்யும் வழிமுறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என கூறினார். இந்நிலையில் தடைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தமிழக முதல்வர் விளக்கம் அளித்தார்.

 



Tags : NGOs ,Volunteers ,Government of Tamil Nadu ,Govt , Volunteers, NGOs, not prohibited, providing food , instructions , steps, Govt.
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...