சென்னை: கொராேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தடை விதிப்பதற்கு தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோயினால் பாதித்து வருகிற மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் அதிமுக அரசுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. இந்நிலையில் அரசியல் கட்சிகள்நிவாரணம் வழங்கக்கூட்டாது. வழங்க விரும்புபவர்கள் அதை மாநில அரசின் மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கவேண்டும், அதை அரசு அலுவலர்கள் தான் விநியோகிப்பார்களே தவிர அரசியல் கட்சிகள் நேரடியாக விநியோகிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது.
இத்தகைய மனிதாபிமானமற்ற சர்வாதிகார தடையை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தமிழக ஆட்சியாளர்கள் செய்த நிவாரண உதவிகளைவிட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பகுதியில் நேரடியாக நிவாரணம் வழங்கி நற்பெயர் பெற்றுவருவதை சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட அதிமுக ஆட்சியாளர்கள் தடையை விதித்துள்ளனர். இத்தகைய தடையை விதிப்பதற்கு தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.