சென்னை: தாம்பரம், வேளச்சேரியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தாம்பரத்தில் தங்கியுள்ள 1500 வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். அதேபோல், வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் தங்கியுள்ள 500க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை ‘குருநானக் கல்லூரி டிரஸ்ட்’ மூலமாக வழங்கினார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: வீடு, வாசல் மற்றும் உறவுகளை துறந்து தங்களுடைய வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாய் பிற மாநில தொழிலாளர்களை நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான உள்கட்டமைப்புக்கு பின்னிருக்கும் இவர்களது உழைப்பு அளப்பரியது. நன்றியோடு துணை நிற்போம்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.