சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில் கொத்தமங்கலம், ராஜன் நகர், அண்ணா நகர், கோடேபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மாலைகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு கோழி கொண்டை பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். கோழிக்கொண்டை நாற்று நடவு செய்து 45 நாட்களில் பூ பூக்க துவங்கிவிடும். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், வாகன போக்குவரத்து ரத்து மற்றும் பூ மார்க்கெட் மூடப்பட்டதாலும் பூக்களை பறிக்க முடியவில்லை. இதனால் கோழிக்கொண்டை பூக்கள் செடியிலேயே மலர்ந்து காய்ந்து உதிர்ந்து விடுகிறது.
சிலர் அடுத்தடுத்து மொட்டு விடாது என்பதால் கூலி ஆட்களை வைத்து பறித்து வீணாக கீழே கொட்டுகின்றனர். பூ மார்க்கெட் இல்லாமல் வருமானத்தையும் இழந்தும், பூக்களையும் பறித்து கீழே போட கூலியும் கொடுப்பதாலும், இரு இழப்பை சந்திக்க வேண்டி உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் வரை கிராமங்களில் திருவிழா காலம். இம்மாதங்களில் கோழிக்கொண்டை பூவிற்கு தேவை அதிகமாக இருக்கும். இதற்காக அதிக பரப்பளவில் கோழிக்கொண்டை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கொரோனாவால் நிலைமை தலைகீழாக மாறிப் போனது. தமிழக அரசு தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.