டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை. இதனால், மகாராஷ்டிரா உட்பட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மாநிலங்கள் முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அதோடு, மக்களின் விருப்பத்துக்காக முடக்கத்தை தளர்த்தினால், மிகப்பெரிய உயிர்ச் சேதத்தை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டார். பெரும்பாலான மாநில முதல்வர்களின் பரிந்துரையை ஏற்று ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே, ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை அமல்படுத்தும் அதேவேளையில் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதன்படி விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற உறுதிப்படுத்த வேண்டும். வரும் காலங்களில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. சிறுகடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் ஊரடங்கு உத்தரவை விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட ஏழை, எளிய தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டுமான துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இருப்பினும், விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோலேவே அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் திங்கள் முதல் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பணியாற்றுவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.