சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பணியிட மாற்றம் செய்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போதைய மிக நெருக்கடியான சூழ்நிலையில் பொதுத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் அவர்களும் அவர்களது குடும்பமும் உடல் மற்றும் மன ரீதியாக அச்சத்தையும் சிரமத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிற வேளையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பணியிட மாற்றம் செய்வதை தற்காலிகமாக தவிர்த்து அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.