×

ஊரடங்கு ஊருக்குதானுங்க... பிரியாணி விருந்து தந்த கர்நாடக பாஜ எம்எல்ஏ

கர்நாடக மாநிலம்,  துமகூரு மாவட்டம் துருவகெரே தொகுதி பாஜ எம்எல்ஏ.வாக இருப்பவர்  ஜெயராம். இவர் ஊரடங்கு உத்தரவையும் மீறி, தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாளின் போது பெரியளவில் கேக் வெட்டப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.  பிறந்தநாளுக்கு வந்த விருந்தினர்களுக்கு அவர் தடபுடலாக பிரியாணி விருந்து அளித்தார். ஊரடங்கின்போது 5 பேருக்கு மேல் கூட்டம் கூடக் கூடாது என்ற விதி உள்ளது. திருமணம், இறந்தவர் வீடுகளில் 20 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என்று சட்டமும் உள்ளது.

அதையும் மீறி பாஜ எம்எல்ஏ தனது பிறந்தநாளை கொண்டாடியது சட்டத்தை மீறிய செயல் என்று கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்துள்ளனர். மேலும், ‘சமூக இடைவெளி குறித்து போதிக்கும் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?  பாஜ.வினர் சட்டத்துக்கு மேலானவர்களா? என்று அவர்கள்  கேள்வி கேட்டுள்ளனர். இது பற்றி போலீசிலும் புகார் அளித்துள்ள அவர்கள், ‘எம்எல்ஏ ஜெயராம் மீது முதல்வர் எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றும் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Karnataka Baja MLA , Curfew, biryani dinner, Karnataka BJP MLA
× RELATED டெண்டர் தர லஞ்சம் வாங்கிய போது...