இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை கொரோனா தாக்கியுள்ளது. 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு, சமீபத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவருடைய உடல்நிலை தேறி உள்ளது. அது பற்றி இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ``புனித தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதமரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் ஓய்வெடுக்கும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயே நடைபயிற்சி செய்கிறார். சுடோகு உள்ளிட்ட புதிர் போட்டிகள் விளையாடுவது, சினிமா பார்ப்பது என பொழுதை கழித்து வருகிறார்.
தன்னை நன்கு கவனித்து கொண்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சிந்தனையிலேயே அவர் இருக்கிறார். தற்போது அவரது உடல்நிலை குறித்து நாளொன்றுக்கு ஒரு மருத்துவ அறிக்கை மட்டுமே அளிக்கப்படுகிறது, என்றார். போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் கூறுகையில், ``ஜான்சன் குணமடைந்து வந்தாலும் முறையான ஓய்வெடுக்காமல் பணிகளை கவனிக்க பிரதமர் அலுவலகம் சென்று விடக் கூடாது, என்றார்.