சென்னை : தமிழகத்தில் வேளாண்மைத்துறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஏப். 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகையால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கருத்துகள் உலா வருகின்றன.
இந்நிலையில் இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார் காணொளி காட்சி மூலம் சுமார் 4 மணிநேரம் இந்த ஆலோசனை நீடித்தது. அப்போது, அரசியல் மாற்று கருத்துக்களை மறந்து அனைவரும் இணைந்து, கொரோனாவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசியது பின்வருமாறு..
*கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதற்கட்டமாக ரூ.510 கோடி ஒதுக்கியதற்கு பிரதமருக்கு நன்றி. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதிக்க கூடாது.ரயில் மற்றும் விமான போக்குவரத்தையும் தற்போதைக்கு துவங்க கூடாது.
*அத்தியாவசிய பொருட்களான கோதுமை, பருப்பு போன்றவை தடையில்லாமல் கிடைக்க சுமூக போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.
*ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க கூடுதல் நிதி தேவை.
*ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு உதவ கூடுதல் நிதி தேவை.
*ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.2000 உதவித் தொகை வழங்க வேண்டும்.
*ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு அத்தியாவசியப் பொருட்கள் சுமூகமாக வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
*தமிழகத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுடன் வரும் லாரிகள் மாநிலங்களுக்கு இடையே சுமூகமாக பயணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
*வேளாண்,தோட்டக்கலைத்துறைக்கு என தனிச் சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்.தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ1000 கோடியை ஒதுக்க வேண்டும்.