குன்னூர்: குன்னூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மலைப்பாதையில் வாகனங்கள் இயங்காததால் சாலையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் இல்லாமல் அமைதியான சூழல் நிலவிவருகிறது. இதனால் சாலை ஓரங்களில் ஏறாளமான குரங்குகள் உணவின்றி தவித்து வருகிறது. இதே போன்று காட்டெருமைகளும் சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூர் பர்லியாறு பகுதியில் பலா பழம் சீசன் என்பதால் எட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதில் அவ்வப்போது தந்தத்துடன் கூடிய ஆண் யானை சாலையில் அங்கும் இங்கும் உலா வருகிறது. எனவே வனப்பகுதிகள் இருக்ககூடிய வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.