ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ஊரடங்கை மீறி திறந்திருந்த பேக்கரி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடை ஆகியவைகள் தவிர மற்ற கடைகள் திறக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஒரு பேக்கரி கடை திறந்து வியாபாரம் நடைபெறுவதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த பேக்கரி கடைக்கு சீல் வைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து, அவரது உத்தரவின்பேரில், தடையை மீறி செயல்பட்ட ராஜசேகர் (32) என்பவரின் பேக்கரி கடைக்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் சீனிவாசன் சீல் வைத்தார். அப்போது, வருவாய் ஆய்வாளர் யுகேந்தர் உடன் இருந்தார்.